1848ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் இளைஞர்கள் இருவர் வெளியிட்ட ஒருசின்னஞ்சிறு புத்தகம் ஏற்படுத்திய அதிர்வலைகளை உலகில் வேறெந்த புத்தகமும் ஏற்படுத்தியதில்லை. அதில் இருக்கும் உண்மை யின் சக்தி இன்றும் இளமைத் துடிப்போடு லட்சோப லட்சம் பேரை ஈர்த்து வருகிறது. 30 வயதுடைய கார்ல் மார்க்ஸ், 28 வயதுடைய பிரடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள். அவர்கள் வெளியிட்ட அந்நூல்தான் “கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை”! பின்னொரு சமயம் அவர்களே சொன்னதுபோல் அந்நூல் ஒரு வரலாற்று ஆவணமாக மாறிவிட்டது.
உலகம் இன்று மிகச் சிக்கலானதாக மாறி வருகிறது. ஒரு சின்னஞ்சிறு கும்பலிடம் செல்வக் குவிப்பும், அதிகாரக் குவிப்பும் மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தை எட்டிவிட்டது. மறுபுறம் ஏழ்மை யும், வறுமையும், ஏற்றத்தாழ்வும் கோடானு கோடி மக்களின் உயிர் வாழ்தலை அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறது. இந்நெருக்கடிக்கு விடை காண முடியாமல் பல தரப்பினரும் திண்டாடி வருகின்றனர். ஆனால் தங்கள் கண்களை மூடிக்கொள்ளாமல், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற சிறுநூலை வாசித்து உணர்ந்து கொண்டாலே போதும், விடை கிடைத்துவிடும். இந்நிலை யில்தான் டிரை காண்டினன்டல் இன்டர்நேஷனல் 2020 பிப்ரவரி 21ஆம் நாளை “ரெட் புக் டே” என பெருங்கொண்டாட் டமாக, உலகெங்கும் மார்க்சிய மூல நூல்களை, குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிக்கும் பேரியக்கத்தை நடத்த தீர்மானித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தில்லியில் லெப்ட் வேர்ட் பப்ளிகே ஷன் இந்தியாவில் ரெட் புக் டே நிகழ்வை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சென்னை பாரதி புத்தகாலயம், தமிழகத்தில் ரெட் புக் டே-யை சிவப்புப் புத்தகப் பயணமாக நிகழ்த்துவதென களமிறங்கியுள்ளது. இது குறித்து ஆலோசிப்பதற்கு ஜூலை 27, 28 தேதிகளில் உதகையில் ஒரு கூட்டத்தை நடத்தியது. இதில் சிவப்புச் சிந்தனையாளர்கள், வாசிப்பாளர்கள், பல்வேறு தளங்களில் செயல்படும் களப்பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார்.
சரியானது... பொருத்தமானது...
மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் இம்முகாமின் நோக்கம் பற்றிக் கூறுகையில், உலகம் முழுவதும், இந்தியாவிலும் வலதுசாரி கருத்தியல் மிகப்பெரும் அலையாகத் தாக்குதல் நடத்துகிறது. அதை எதிர்த்து வீழ்த்த வேண்டியது அவசியம். அதேசமயம் எதிர்த்து வீழ்த்துவதுடன், எதிர்காலம் குறித்த பரந்த ஒரு மாற்றுப் பார்வையை மக்கள் முன் வைக்க வேண்டும். முத லாளித்துவ, சாதி, மத கருத்தியலை எதிர்த்துப் போராடக் கூடியதாக இம்மாற்றுப் பார்வை அமைய வேண்டும். இந்த சூழலில்தான் மாமேதை கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இயற்றிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நூலை நாம் வாசிக்க வேண்டும். இந்த சின்னஞ்சிறு நூல் வெளியிடப்பட்டு 171 ஆண்டுகளுக்குப் பிறகும், அதில் இருக்கும் விசை சற்றும் குறையவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அன்றைய கால விபரங்கள் காலாவதி ஆகியிருக்கலாம், ஆனால் இன்றைய காலச்சூழலில் இருந்து படிக்கும்போது இந்நூல் எவ்வளவு சரியானது, பொருத்தப்பாடு உடையது என்பதை நாம் உணர முடியும்.
1848ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்ட காலத்தை விட இன்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அதிகப் பொருத்தம் கொண்டதாக இருக்கிறது என அறிஞர் சமீர் அமின் கூறியுள்ளது மிகையல்ல. முதலாளித்துவப் பொருளாதாரத்தை, அதன் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளவும், அரசு என்பது முதலாளிகளின் விவகாரத்தை நிர்வகிக்கும் குழு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும், தொழிலாளி வர்க்க அரசியலைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் மிகச்சிறப்பாக வழிகாட்டுகிறது என்றார்.
செறிவாகவும் சுருக்கமாகவும்
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி இம்முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் கூறுகையில், நெருக்கடியான நேரத்தில் மூலப்புத்தகங்களைப் படிப்பது நாம் நமது தோல்வி களை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், புதிய கருத்துகளைப் பெறவும் உதவுகிறது. உலகில் பல நாடுகளிலும், இந்தியா விலும் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ கத்தில் 1930ஆம் ஆண்டு தந்தை பெரியார் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் வெளியிட்டார். ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவாக்கப்பட்டது. மனிதகுல சமுதாய வளர்ச்சி யில் வர்க்கங்கள் இல்லாத ஒரு காலம் இருந்திருக்கிறது. பின்பு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சுரண்டல், ஒடுக்குமுறை வந்துள்ளது. மனிதர்கள் வர்க்கமாக பிரிந்த நிலையில் சமத்துவத்திற்கான குரல்கள் கேட்கத் தொடங்கின. கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை வருவதற்கு முன்பு பல வகையான சோசலிச, கம்யூனிஸ சிந்தனைப் போக்குகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட அதே கால கட்டத்தில், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இன்று போல் இல்லாத சூழலில், இன்றைய தமிழகத்தில் இருக்கும் சாமித்தோப்பில் அய்யா வைகுண்ட அடிகளார் சமத்துவ சமாஜம் தொடங்கினார் என்பது கவனிக்கத்தக்கது. சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இத்தகைய சமத்துவ சிந்தனைப் போக்குகள் வெவ்வேறு பகுதிகளில் உருவாகி உள்ளன.
மொழிபெயர்ப்பு அறிஞர் சிவலிங்கம்
இதையடுத்து, பாரதி புத்தகாலயம் எளிய தமிழில் அண்மையில் வெளியிட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூலை மொழி பெயர்த்த அறிஞர் சிவலிங்கம் இந்நூலின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறினார். நூலில் முக்கியமான பகுதிகள் என அடிக்கோடிட்டபோது, அநேகமாக எல்லா பக்கங்களிலும் கோடுகளாக நிரப்ப வேண்டியிருந்தது என்றார். நூலின் ஒவ்வொரு பகுதியிலும் வரலாறு குறித்த பார்வை, முதலாளித்துவ சமுதாயம், முதலா ளித்துவ சமூக உறவுகள், பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம் என பல்வேறு அம்சங்களை அவர் நூலில் இருந்து மேற்கோள் காட்டி விளக்கினார். இந்நிகழ்வில் பங்கேற்றோர் பிப்ரவரி 21ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கத்தை சிறப்பாக நடத்துவதற்கு பல ஆலோசனைகளை வழங்கினர். தமிழகத்தில் 10 ஆயிரம் இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூல் வாசிப்பு இயக்கத்தை நடத்துவது, மொத்தம் 1 லட்சம் பிரதிகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூலை வாங்கி விற்பனை செய்வது என்று முடிவு செய்யப்பட்ட விபரத்தை பாரதி புத்தகாலயம் மேலாளர் கே.நாக ராஜ் கூறினார். இந்நிகழ்வை வெற்றிகரமான மக்கள் இயக்க மாக கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
எதிர்காலத்திற்கான தூண்டுகோல்
நிறைவுரையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், உலகம் முழுவதும் வலதுசாரி திருப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் வேளையில், இடதுசாரிகளை ஈர்க்கும் கருத்துகளைக் கொண்டு செல்லும் நிகழ்வாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூல் வாசிப்பு இயக்கம் நடத்தப் படுகிறது. புத்தகம் விற்பனை, மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வது, இளைஞர்கள், மாணவர்களை வாசிக்கச் செய்வது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் யோசிப்பு, வாசிப்பு, ஈர்ப்பு ஏற்படுத்துவது அவசியம். கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை மட்டுமின்றி ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் இயக்க இலக்கியங்கள் எதிர் காலத்திற்கான தூண்டு கோலாக அமையும்.
உலக அளவில் பைபிள், குரானுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் அதிக பிரதிகள் விற்பனை ஆகியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூல்தான். நவீன உலகில் வேறு எந்த நூலையும் விட மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைதான் என விரிவாக விளக்கிக் கூறினார். உதகையின் நடுங்கும் குளிர்ச் சூழலில் இம்முகாமில் பங்கேற்றோரின் நெஞ்சங்களில் அக்னி குஞ்சாக “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” பற்றிக்கொண்டது. அது தமிழ கம் முழுவதும் 2020 பிப்ரவரி 21ஆம் தேதி பெரு நெருப்பாகப் பற்றிப்பரவும் என்பது உறுதி.